Monday 25 May 2015




                                                  வைகாசி விசாகம் 2015


வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதாரம் செய்த நாளாகும். ஆறு நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்தது விசாகம். இதனால் முருகப் பெருமானும் ஆறு முகங்களோடு திகழ்கிறார் என்பது ஐதீகம். கந்தனாகிய சக்தி வெளிப்பட்ட திருநாள். அதனால் விசாகன் என்பதும் முருகனுடைய திருப்பெயர்களில் ஒன்று. 

தாவரங்களும், விலங்குகளும், மனிதர்களும் ஓன்றே என்ற உண்மையின் தத்துவத்தை விளக்குதலே இந்நாளின் சிறப்பாகும். ஆறுமுகன் அவதாரம் “அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்ட ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய" என்று முருகப் பெருமானின் அவதாரத்தை கந்தபுராணம் கூறுகிறது. 

அசுரசக்திகளை அழிக்க பரமனின் நெற்றிக்கண்ணில் உதித்த சக்திச் சுடர்களை அக்னிதேவன் கங்கையில் சரவணப் பொய்கையில் இட, அங்கு தோன்றினர் ஆறு குமாரர்கள். கார்த்திகைப் பெண்கள் அவர்களைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். அதனால் அக்னிகர்ப்பன், காங்கேயன் (கங்கையின் மைந்தன்), சரவணன் (சரம் என்ற நாணல் புதர்கள் மண்டிய பொய்கையில் அவதரித்தவன்), கார்த்திகேயன் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டவன்) ஆகிய திருநாமங்களால் முருகப் பெருமானை வணங்குகிறோம். பரம்பொருளாகிய பிரம்மமே திருமுருகனாகி உலகைக் காக்கின்றது. சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்றது என்பதனை, “ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே" என்று அருணகிரியார் பாடுவார். 

மாசியில் சிவபிரான் மன்மதனை எரித்துப் பின்னர் உயிர்ப்பித்த காமதகனம் (ஹோலி, காமன் பண்டிகை). பின்னர் பங்குனி உத்திரம், சித்திரா பௌர்ணமியில் சிவ-பார்வதி திருக்கல்யாணம். வைகாசி விசாகத்தில் குமரன் உதயம். அழகாக, தொடர்ச்சியாக இந்த தெய்வத் திருவிழாக்கள் வருகின்றன. 

வழக்கம்போல் நம்  வைகாசி விசாகம்1.6.2015 திங்கள் கிழமை அன்று காலை 8.00 மணி சுப்ரமணிய சஹஸ்ரநாம அர்ச்சனையுடன் தொடங்கி சுப்ரமண்ய புஜங்கம் பாராயணம் முடிந்தபின், திருப்புகழ் இசை வழிபாடு நடைபெற உள்ளது .அன்பர்கள் முன்னதாகவே வந்து அர்ச்சனையில் கலந்துகொள்ள வேண்டுகின்றோம்.

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு விழா  செம்பூர் அஹோபில மடம் வசந்த மண்டபத்தில் 
நடக்க உள்ளதை அன்பர்கள் கவனத்தில் கொள்ளுமாறு  பணிவுடன் வேண்டுகிறோம்.

முருகா  சரணம்.